சென்னை: ஆசிய வளர்ச்சி வங்கியின், Global Environmental Facility மானிய நிதியில் கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணிக்கு ரூ.58.33 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பருவ மழை காலங்களில் பெருவெள்ள பாதிப்பை கட்டுப்படுத்தவும். மழை நீர் கடலில் சென்றடைவதை தடுத்து நீர்நிலைகளில் சேமிப்பதற்காகவும், பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நீர் நிலைகளை சீரமைத்து காக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணியின் ஒரு பகுதியாக ஆசிய வளர்ச்சி வங்கி, Global Environmental Facility மானிய நிதியில் கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணிக்கு ரூ.58.33 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.
கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணியில், ஏரியினை தூர்வாரி, ஆழப்படுத்தி, அகலபடுத்தி, ஏரியின் கரையை உயர்த்தி அமைத்து ஏரியின் கொள்ளளவு மூன்று மடங்காக அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த புனரமைப்பு பணியில் மதகுகளை சீரமைத்தல், பல்லுயிர் வாழ்விடங்களை மேம்படுத்துதல் பொது மக்கள் பயன்பாட்டிற்காக, ஏரியின் கரையில் பசுமை தோட்டம் மற்றும் நடைபாதை அமைத்தல், ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணியினால் ஏரியினை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் தேங்குவது தவிர்க்கப்படும். மேலும் கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணியினால் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சீரான பாசன வசதி செய்து தரப்படும்.