பெங்களூரு: கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் கொரோனா தொற்று பரவல் சமயத்தில் மருந்து மாத்திரைகள், உபகரணங்கள் வாங்கியதில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் குன்ஹா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் நடந்துள்ள ஊழல் முறைகேடு புகார்களை விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என்று தேர்தல் சமயத்தில் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அதை செயல்படுத்தும் வகையில் ஒவ்வொரு முறைகேடு புகாருக்கும் விசாரணை குழு அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநிலத்தில் பாஜ ஆட்சி இருந்தபோது, கடந்த 2020-21 மற்றும் 2021-22 ஆகிய இரு ஆண்டுகளில் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை, கொள்முதல் செய்த மருந்து, மாத்திரைகள், முககவசம், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்தற்காக பல கோடி செலவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையில் கொரோனா காலத்தில் செலவிடப்பட்ட நிதியில் ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஊழல் முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று கடந்த வாரம் முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.
அதை செயல்படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். மூன்று மாதங்களில் விசாரணை முடித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரணை நடத்தி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தண்டனை வழங்கிய நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.