Sunday, October 6, 2024
Home » அமைச்சர்கள் மீது தாமாக முன்வந்து விசாரிக்கும் முன் அனுமதி கடிதத்தை தலைமை நீதிபதி பார்க்கும் முன்பே விசாரணையை தொடங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்: உச்ச நீதிமன்றத்தில் சென்னை ஐகோர்ட் பதிவாளர் அறிக்கை

அமைச்சர்கள் மீது தாமாக முன்வந்து விசாரிக்கும் முன் அனுமதி கடிதத்தை தலைமை நீதிபதி பார்க்கும் முன்பே விசாரணையை தொடங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்: உச்ச நீதிமன்றத்தில் சென்னை ஐகோர்ட் பதிவாளர் அறிக்கை

by Francis

புதுடெல்லி: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என தெரிவித்த வில்லிபுத்தூர் நீதிமன்றம், கடந்த ஆண்டு அவரை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யவில்லை எனக்கூறி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை தாமாக முன்வந்து வழக்கை பட்டியலிட்டு விசாரித்து வருகிறார். இந்த நிலையில் தன் மீதான வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரிப்பதற்கு தடைக்கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹெச். ராய் மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அமர்வு, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்று தான், தனி நீதிபதி தாமாக முன்வந்து விசாரித்து வருகிறாரா அல்லது தன்னிச்சையாக விசாரிக்கிறாரா என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அதுசார்ந்த விவரங்கள் கூடிய அறிக்கையை வரும் திங்கட்கிழமைக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த வாரம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘தமிழ்நாட்டின் முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதற்கு முன் அனுமதி கோரி தனி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் 21.8.2023 அன்று கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அந்த கடிதத்தை 23.8.2023 அன்று பதிவாளர் அலுவலகம் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தது. அந்த கடிதத்தை 31.8.2023 அன்று தலைமை நீதிபதி பார்த்து விட்டார். அதே நேரத்தில் முன் அனுமதி கடிதத்தை தலைமை நீதிபதி பார்ப்பதற்கு முன்பாகவே தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது வழக்கின் விசாரணையை தொடங்கிவிட்டார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிரிமினல் வழக்கு விசாரணைகளை உயர் நீதிமன்றங்கள் நடத்துவது தொடர்பாகவும், தானாக முன்வந்து விசாரிப்பது தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தால் சில வழக்குகளில் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்கப்பட்டு அவை குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியால் கிரிமினல் குற்ற நடைமுறை குழுவிற்கு அனுப்பப்பட்டு அந்த குழுவும் தனது பரிந்துரைகளை தலைமை நீதிபதியிடம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

You may also like

Leave a Comment

two × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi