புதுடெல்லி: சீக்கிய மத போதகரான அம்ரித்பால் சிங் பஞ்சாப்பின் கதூர் சாஹிப் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இன்ஜினியர் ரஷித் என அழைக்கப்படும் ஷேக் அப்துல் ரஷித், ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு 4.72 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரிடம் தான் உமர் அப்துல்லா தோல்வி அடைந்துள்ளார். தீவிரவாதி நிதி உதவி செய்த குற்றச்சாட்டின் உபா சட்டத்தின் கீழ் கைதாகி கடந்த 2019 ஆகஸ்ட் 9ம் தேதி முதல் டெல்லி திகாரில் ரஷித் அடைக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கைதான அம்ரித்பால் சிங் அசாமின் திப்ரூகர் சிறையில் கடந்த 2023 ஏப்ரல் முதல் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்தாலும் இவர்கள் மக்களவை எம்பியாக பதவிப்பிரமாணம் செய்ய நேரில் வர அரசியலமைப்பு உரிமை உண்டு. இதற்காக சிறைத்துறையிடம் முறையாக அனுமதி பெற்று பதவியேற்பு விழாவில் பங்கேற்கலாம். அதே சமயம் அவை நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்க முடியாது. சத்தியபிரமாணம் செய்த பின்னர், அவையில் கலந்து கொள்ள முடியாததற்கான காரணத்தை சபாநாயகருக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். அதை நாடாளுமன்ற குழு பரிசீலனை செய்து அவையில் வாக்கெடுப்பு நடத்தி அனுமதி வழங்கப்படும். குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் 2 ஆண்டுக்கு மேல் தண்டனை வழங்கப்படும் பட்சத்தில் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.