மூணாறு : மூணாறு அருகே வசந்த காலத்தின் வருகையை வரவேற்கும் வகையில் ஜக்ராந்தா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.கேரள மாநிலம், மூணாறு அருகே கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிவாசல் எஸ்டேட் பகுதி மற்றும் மூணாறு – மறையூர் சாலை பகுதி தேயிலை தோட்டத்திற்கு இடையே இயற்கையை ஊதா வண்ணங்களில் தீட்டியது போல ஜக்ராந்தா மலர்கள் பூத்துக் குலுங்குவது காண்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது ஜக்ராந்தா மரம். மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளில் இந்த மரங்கள் அதிகமாக காணப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இம்மரங்கள் இங்கு நடப்பட்டன. பயக்னோனீசியா குடும்பத்தைச் சேர்ந்தவை ஜக்ராந்தா. அறிவியல் பெயர் ஜக்ராந்தா மிமோஸிபோலியா. பிப்ரவரி மாதங்களில் ஜக்ராந்தா மலர்கள் கொத்து கொத்தாக பூத்துக் குலுங்கும். இந்த பூக்களின் அழகை சுற்றுலாப்பயணிகள் உட்பட அனைவரும் சிறிது நேரம் நின்று ரசித்தப்படி செல்பி எடுத்து விட்டுத் தான் செல்கின்றனர்.