சென்னை: ரூ.457.76 கோடி உள்ளீட்டு வரியினை தவறுதலாக வழங்கிய 151 வணிகர்களின் பதிவுச்சான்றுகளை வணிகவரித்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. இது குறித்து வணிகவரித்துறை ஆணையர் வெளியிட்ட அறிக்கை: கடந்த மார்ச் 1ம் தேதி நடைபெற்ற 2024 பிப்ரவரி மாதத்திற்கான இணை ஆணையர்களின் பணித்திறனாய்வு கூட்டத்தில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தலின்பேரில் போலி பட்டியல் வணிகர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ் நாடு வணிக வரித்துறை புதிதாக பதிவு செய்த 102 லட்சம் வரி செலுத்தும் வணிகர்களின் தரவுகளை ஆய்வு செய்ததில் 378 சந்தேகத்திற்குரிய பதிவுபெற்ற வணிகர்கள் கண்டறியப்பட்டனர்.
இந்நிதியாண்டில் மட்டும் சில மாதத்திற்குள்ளாகவே ரூ.1,043 கோடிக்கான உள்ளீட்டு வரியினை தவறுதலாக வழங்கியுள்ளதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வணிக வரித் துறை நுண்ணறிவுப்பிரிவின் மூலம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் விளைவாக, மாநில வரம்பிற்குட்பட்ட 151 வணிகர்கள், ரூ. 457.76 கோடி உள்ளீட்டு வரியினை தவறுதலாக வழங்கியுள்ளது கண்டறியப்பட்டு அவர்களின் பதிவுச்சான்றுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.