சென்னை: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகள் நளினி, முருகன், சாந்தன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்து கடந்த 2022 நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் முருகன், சாந்தன் உள்ளிட்டோர் திருச்சி அகதிகள் முகாமில் இருந்தனர். இதனிடையே முகாமில் இருந்த சாந்தனுக்கு கடந்த ஜனவரி 24ம்தேதி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாந்தனின் உடல் நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கோமா நிலைக்குச் சென்றுள்ள சாந்தனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.