சென்னை: முண்டாசுக் கவிஞர் பாரதியாரின் பிறந்தநாளில் அவரின் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன் என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார். சுப்பிரமணிய பாரதி கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.
பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, தாய்மொழி தமிழை உயிராக நேசித்த மகாகவி, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகச் சினம் கொண்டெழுந்த முற்போக்கு சிந்தனையாளர், இதழியல் புதுமையாளர், அந்நிய ஆட்சிக்கு அடங்க மறுத்து தன் எழுச்சிமிகு பாடல்களால் “ரௌத்திரம் பழகு” என்று உரக்க உரைத்தவர், நாட்டில் பல்வேறு துறைகளில் சாதிக்கக் கூடிய புதுமைப் பெண்கள் உருவாக விரும்பியவருமான முண்டாசுக் கவிஞர் பாரதியார் பிறந்தநாளில் அவரின் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன். என்றும் குறிப்பிட்டுள்ளார்.