பாட்னா: எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய இருப்பதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்த்து போட்டியிட காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 26 கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன. இக்கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவிலும், பெங்களூருவிலும் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் வரும் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி நடக்க உள்ளது.இது குறித்து பாட்னாவில் நேற்று பேட்டி அளித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ‘‘மும்பையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், மக்களவை தேர்தலுக்கான உத்திகள் குறித்து விவாதிப்போம்.
மேலும், தொகுதி பங்கீடு தொடர்பான விஷயங்களை இறுதி செய்வது குறித்தும் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எங்களின் இந்தியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய உள்ளன. 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக அதிகபட்ச கட்சிகளை ஒன்றிணைக்க விரும்புகிறேன். அந்த திசையிலேயே நான் செயல்படுகிறேன். மற்றபடி எந்த பதவி மீதும் எனக்கு ஆசை இல்லை’’ என்றார்.இதற்கிடையே, நாக்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் ெசய்தி தொடர்பாளர் அலோக் சர்மா,’ பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியை சேர்ந்த நான்கைந்து கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணியில் சேரும்’ என்று தெரிவித்தார்.