காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் காமராஜர் நகரை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவர் தனது மனைவி கீதாவுடன் திருப்பூர் ரோடு சிவசக்தி விநாயகர் கோயில் அருகே தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு உணவகத்துக்கு வந்த காங்கயம் இந்து முன்ணணி நகர செயலாளர் நாகராஜ் ஆப்பாயில் கேட்டுள்ளார். அப்போது அது உடைந்து இருந்ததால் கடைக்காரர்களுக்கும் நாகராஜூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்து முன்ணணி கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் சதீஸ் தலைமையில் நாகராஜ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இந்து முன்ணணி அமைப்பினர் உணவகத்துக்கு கீதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ‘‘கோயிலுக்கு அருகே ஆம்லெட் விற்கக்கூடாது’’ என எச்சரித்தனர். பின்னர் ஆபாச வார்த்தைகளால் திட்டி கீதாவை இந்து முன்ணணியினர் தாக்கினர். காயம் அடைந்த கீதா காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்த புகாரின் பேரில் சதீஸ், நாகராஜ் உள்ளிட்டோர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 3 பிரிவுகளில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.