பொன்னை: வேலூர் மாவட்டம், பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணிகளை அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கேரள அரசுடன் முல்லை பெரியாறு விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார். முல்லை பெரியாறில் ஒன்றும் பிரச்னையில்லை. கர்நாடக அரசு மேகதாது அணை விவகாரத்தில் ஆய்வு செய்தாலும், அவர்கள் படம் வரைந்தாலும் அந்த திட்டத்திற்கு தமிழக அரசின் ஒப்புதலும், ஒன்றிய அரசின் ஒப்புதலும் அளிக்க வேண்டும். தென் மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து நீர்ப்பாசனத்துறை சார்பில் ஒன்றிய அரசுக்கு அறிக்கை அனுப்ப உள்ளோம்.
அரசியல் என்பது திருவிளையாடல் தான். கட்சி மாறுவது போன்ற திடீர் திடீர் செய்திகள் வரும். இந்தியா கூட்டணியில் நடப்பது எல்லாம் பழையது தான். திமுக தேர்தல் அறிக்கையை தயார் செய்து வருகிறோம். இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை. காங்கிரஸ் மட்டும் தான் பேசிவிட்டு சென்றுள்ளனர். அரசியலில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் அடுத்த தேர்தலில் எங்களுடன் வருவார்கள். இந்தியா கூட்டணியில் இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை. அதன் பின்னரே யார் இருக்கிறார்கள், யார் செல்கிறார்கள் என்பது தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.