திருவனந்தபுரம்: கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இடுக்கி, மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மலையோரப் பகுதிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கேரளா முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, இடுக்கி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்கிறது.
வரும் மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மலையோரப் பகுதிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.