Friday, May 17, 2024
Home » கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு திருமணமான புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை

கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு திருமணமான புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை

by Lakshmipathi

*அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு

வாணியம்பாடி : கணவருக்கு வேறொரு பெண்ணுடம் தொடர்பு ஏற்பட்டதால் திருமணமான புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (34), இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி(32) இவர்கள் இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தேன்மொழி கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சென்னையில் அருண்குமார் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த தேன்மொழி கடந்த வாரம் வீட்டிற்கு வந்த அருண்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார் தேன்மொழியை பள்ளிப்பட்டு கூட்டுசாலை பகுதியில் உள்ள அவரது அம்மா வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.

தொடர்ந்து தேன்மொழியும் அருண்குமாரும் தொலைபேசியில் சண்டையிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் தேன்மொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த தேன்மொழியை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு தேன்மொழிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். கிருஷ்ணகிரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு தேன்மொழியை அழைத்துச் சென்றபோது தேன்மொழி மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் உயிரிழந்த தேன்மொழியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட தேன்மொழியின் உறவினர்கள் உடனடியாக அருண்குமாரை கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களிடம் கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அங்கிருந்து கலந்து சென்றனர். பின்னர் நேற்று மாலை திடீரென வாணியம்பாடி அரசு அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர். அப்போது தேன்மொழியின் தற்கொலைக்கு காரணமான அருண்குமார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வந்த வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தேன்மொழியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தேன்மொழியின் தற்கொலைக்கு காரணமான அருண்குமார் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பின்னர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இதையடுத்து வாணியம்பாடி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

18 + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi