கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே பேடர்ஹள்ளி பகுதியில் தனியார் பள்ளி கட்டுமான பணியின்போது விபத்து நேரிட்டதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பெங்களூரு ஊரகம் மாவட்டம் ஆனைக்கல் தாலுகா, பேடர்ஹள்ளி கிராமத்தின் அருகே தனியார் பள்ளி கட்டுமானம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த கட்டடத்தின் முதல்தளம் சிமென்ட் கான்கிரீட் போடும் பணி முடிந்து இன்று அதிகாலை சுமார் 8 மணியளவில் 2-ம் தளம் கான்கிரீட் போடும் பணி நடந்து வந்தது. இந்த பணியில் 25 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென 2ம் தளத்தில் கான்கிரீட் மோல்டிங் முற்றிலுமாக சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சரிவில் 25 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர்.
அதில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 16 பேர் ஆனைக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிருக்கு ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக மின்ஹாந்த் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 மணியளவில் விபத்து ஏற்பட்டபோது உடனடியாக தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஜேசிபி வாகநந்தை கொண்டு சரிவில் சிக்கிக்கொண்ட அனைத்து தொழிலாளர்களையும் மீட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக கட்டுமான கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்ததாரர் மீது தவறு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவ்வாறு தவறு உறுதிசெய்யும் பட்சத்தில், ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.