சென்னை: ‘காலம் உள்ளவரை கலைஞர்’ என்ற நவீன புகைப்படக் கண்காட்சி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று திறந்து வைத்தார். கண்காட்சி அரங்கத்தில் கலைஞரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளான திருவாரூரில் தொடங்கி சென்னை மெரினா கடற்கரை நினைவிடம் வரை என 100க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. உள்ளே நுழைந்ததும் ஹாலோகிராபி தொழில்நுட்பத்துடன் கூடிய 40 வயது தோற்றத்துடன் கலைஞர் நேரடியாக மக்களுடன் பேசும் தமிழைப் போற்றி கவிதைக் காவியம் இடம் பெற்றுள்ளது. மேலும் ஒரு அரங்கில் ‘வாழும் வரலாறு கலைஞரின் கதைப்பாடல்’ காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும் ஒரு அரங்கில் கலைஞர் எப்போதும் அவர் விரும்பும் முரசொலி அலுவலகத்தில் உரையாடுவதுபோல் ஒரு செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ஒரு அறையில் நவீன தொழில்நுட்பத்துடன் 3டி கேமராவில் பதிவு செய்த கலைஞரின் வரலாற்றுக் காவியமும், கலைஞர் வழியில் தொடரும் திராவிட அரசின் மக்கள் போற்றும் அரசின் சாதனைகளை விளக்கும் 3டி காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி வரும் 10ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, திரைப்பட கவிஞர் பா.விஜய், சென்னை மாநகர மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றிஅழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், திமுக பகுதி செயலாளர் முரளி, ராஜசேகர், ஐசிஎப் முரளிதரன், இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், வர்த்தக அணி லயன் உதயசங்கர், மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.