குன்னூர் : குன்னூர், கட்டேரி பூங்காவில் அடர்ந்த வனத்தில், மனிதர்கள் கண்ணுக்கு எளிதில் தென்படாத சிறுத்தை பூனைகள் உலா வந்தன. இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் அடர்ந்த வனப்பகுதி உள்ளன. இங்கு பிரமிக்க வைக்கும் அரியவகை பறவைகளான மலபார் பைட் ஹார்பில், அமுர்பால்கன் உள்ளிட்டவைகள் வாழ்கின்றன. இதேபோன்று கருஞ்சிறுத்தை, பறக்கும் அணில், சிறுத்தை பூனைகள் உள்ளிட்ட வனவிலங்குகளும் வசிக்கின்றன. பெரும்பாலும் இவைகள் மனிதர்கள் கண்ணுக்கு தென்படாமல் வசிக்கும் சுபாவம் கொண்டவைகள்.
அதிசயமாக அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வதுண்டு. அதன்படி நேற்று முன்தினம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பூங்காவிற்கு பகல் நேரத்தில் 2 சிறுத்தை பூனைகள் வந்தன. இதனை பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். பூங்காவில் 2 சிறுத்தை பூனைகளும் விளையாடி மகிழ்ந்தன. இது போன்ற வனவிலங்குகளை முதல் முறையாக பார்ப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.