ஒடுகத்தூர் : ஒடுகத்தூரில் பெய்த தொடர் மழை காரணமாக உத்திர காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ்நாட்டில் கோடை வெயில் தொடங்கியதில் இருந்தே வேலூர் மாவட்டத்தில் நாள்தோறும் வெயில் சதமடித்துக் கொண்டே இருந்தது. இதனால், பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதனால், நீர் நிலைப் பகுதிகளான குளம், குட்டை, ஏரி, ஆறு போன்றவற்றில் தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளித்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்படுகிறது. மேலும், வற்றிபோன குளம், குட்டை போன்ற நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. அதேபோல், ஒடுகத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழை காரணமாக உத்திர காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.