சாத்தான்குளம்: சாத்தான்குளம் பேரூராட்சியில் உள்ள சுகாதார பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் பகுதியில் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த மருத்துவ முகாமிற்கு செயல்அலுவலர் உஷா தலைமை வகித்து முகாமை துவங்கி வைத்தார். முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் ஐலின் சுமதி, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எழுத்தர் கிங்ஸ்டன் வரவேற்றார். பேரூராட்சியில் பணிபுரியும் சுகாதாரப்பணியாளர் அனைவருக்கும் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ அலுவலர் ரைசா மருத்துவ சிகிச்சை அளித்தார். சுகாதாரப்பணியாளர்கள் சுகாதாரமான முறையில் கழிவுகளை அகற்ற ஆலோசனை வழங்கப்பட்டது. எப்போதும் பணி செய்யும் போது கிளவுஸ் கையுறைகள் அணிந்து பாதுகாப்பாக பணி செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது. குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் கிராம சுகாதார செவிலியர் பெர்னத், சுகாதார ஆய்வாளர் அருண், பெண் சுகாதார தன்னார்வலர் பணியாளர்கள் சுதா, பாத்திமா, பொன்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் நன்றி கூறினார்.