காஞ்சிபுரம்: தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் வாள்வீச்சு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற லதா, கலெக்டர் கலைச்செல்வி மோகனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கோயம்புத்தூரில் தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் 16வது வாள்வீச்சு போட்டி நடந்தது. இதில், 20 மாநிலங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த லதா உட்பட 14 மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்றனர். இதில் லதா, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாரத்தில் அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், வாள்வீச்சு போட்டியில், தேசிய அளவில் சேபர் குழு விளையாட்டில் வெண்கல பதக்கம் பெற்று தமிழகத்திற்கும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். லதா, நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இந்நிகழ்வின்போது, மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள்) கந்தன், வாலாஜாபாத் ஒன்றியம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் இந்திரா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி ஆகியோர் உடனிருந்தனர்.