கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அடுத்த ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கிளாம்பாக்கத்தில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி உள்ளது. 1300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து ஐயஞ்சேரிக்கு செல்லும் பிரதான சாலை ஓரத்தில் உள்ள பள்ளியின் நுழைவாயில் மற்றும் இரும்பு கேட் அருகில் இருந்த சுற்றுச்சுவரில் திருவள்ளுவரின் திருஉருவமும், பள்ளியின் பெயரும் கண்ணை கவரும் வகையில் வரையப்பட்டு எழுதப்பட்டிருந்தது. இதனிடையே நேற்று பள்ளி நிர்வாகம் சார்பில், பொக்லைன் இயந்திரம் மூலம் மதியம் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜியிடம் கேட்டபோது, ”மாணவ. மாணவிகளின் நலனை கருத்தில்கொண்டு குடிநீர் பிரச்னையை தீர்க்க பள்ளி வளாகத்தில் 1500 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்தோம். பள்ளி நுழைவாயில் வழியாக போர்வெல் இயந்திரம் வரமுடியாத காரணத்தால் சுற்றுச்சுவரை இடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி முடிந்ததும் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை மீண்டும் கட்டி விடுவோம். அதிலுள்ள வண்ண ஓவியங்களும் வரையப்படும் என்றார். புதுபொலிவுடன் இருந்த பள்ளி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.