![](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/04/135.jpg?type=webp&quality=80)
கூடலூர்: தேனி மாவட்டத்தில் பெரியாற்று தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11,807 ஏக்கர், தேனி வட்டத்தில் 2,412 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர் என பதிவு பெற்ற 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. கூடலூர் தாமரைக்குளம், வெட்டுக்காடு, பாரவந்தான், பி.டி.ஆர் வட்டம், ஒழுகுவழி, மரப்பாலம், ஒட்டான்குளம் பகுதியில் மட்டும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் விவசாயம் நடக்கிறது. தற்போது இப்பகுதியில் இரண்டாம் போகம் சாகுபடி செய்யப்பட்ட என்எல்ஆர், கோ 51, கோ 52, ஆகிய ரகங்கள் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது. நெல் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் கூடலூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூடலூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கலெக்டர் ஷஜீவனா தேனி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் கூடலூர் 1 ஃவது வார்டு அரசமரம் அருகே வேளாண் மையம் பகுதியில் அரசு நேரடி நெல்முதல் நிலையம் திறக்கப்பட்டது. கிரேடு ரகம் நெல் குவிண்டால் விலை ரூ.2,160க்கும், பொதுரகம் குவிண்டால் ரூ.2,115க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
இந்த நெல் கொள் முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு, விவசாயிகளின் வங்கி கணக்கில் உடனடியாக பணம் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.