சேலம்: சேலம் அருகேயுள்ள மேட்டுப்பட்டி தேவாங்கர் காலனியை சேர்ந்தவர் மணி (50). இவர் நேற்று மாலை 5 மணி அளவில் அயோத்தியாப்பட்டணம் அரசு பள்ளியில் இருந்து மாணவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, பாலாஜி நகருக்கு சென்றார். அப்போது ஆட்டோவை சேலம் -அரூர் மெயின்ரோட்டிற்கு ஏற்றினார். அந்நேரத்தில் சேலத்தில் இருந்து திருவண்ணாமலை சென்ற அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது. அதில் தூக்கி வீசப்பட்ட ஆட்டோவின் முன்பக்கம் நசுங்கியது. இதனை பார்த்த பொதுமக்கள் ஓடோடி வந்து உள்ளே இருந்த 2 மாணவர்களை மீட்டனர். அப்போது லேசான காயம் அடைந்த அவர் களை அத்தியாப்பட்டணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனை பார்த்த ஆட்டோ டிரைவர் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டதோ என கருதிக்கொண்டு ஓடினார். பின்னர் ஆட்டோவில் இருந்த கயிற்றை எடுத்து அருகில் இருந்த மரத்தில் கட்டி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். ஆட்டோ டிரைவர் தப்பி ஓடுவதாக நினைத்த அப்பகுதி மக்கள் அவரை தேடிச்சென்றனர். அங்கு அவர் மரத்தில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.