ஈரோடு: மலைப்பகுதி சாலையில் வாகனங்களை வழி மறித்த காட்டு யானைகளால் பரபரப்பு நிலவியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கேர்மாளம் மலைப்பகுதியில் யானைகள் அதிகளவில் உள்ளன. தீவனம் மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி காட்டு யானைகள் சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கேர்மாளம் நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது வனப்பகுதியில் இருந்து குட்டிஉடன் வெளியேறிய காட்டு யானைகள் கேர்மாளம் சாலையில் வாகனங்களை வழிமறித்தது. சாலையோரம் இருந்த தீவனங்களை சாப்பிட்டபடி நின்று கொண்டிருந்தது. குறுகிய வளைவு காரணமாக யானையை கடந்து செல்லமுடியாமல் அரசு பேருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரை மணி நேரமாக காத்திருந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.
போ சாமி.. போ.. வழி விடு சாமி.. என அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானைகளை பயணிகள் பாசமாக விரட்டினர். தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினர். அதனைத் தொடர்ந்து அரசு பேருந்து கேரமாளம் நோக்கி புறப்பட்டு சென்றது.காட்டு யானைகள் சாலையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.