சென்னை: வரலாற்றில் முதன்முறையாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.50,000ஐ தொட்டது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது. ஆதலால் தங்கத்தின் விலை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டு இருக்கிறது.
குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு தங்கத்தின் விலை தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று (மார்ச் 28) மேலும் அதிகரித்தது. சென்னையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.6,280-க்கும், பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கும் விற்பனையாகிறது. 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.54,544-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.80,500 ஆக உள்ளது.