சென்னை: மகளிர் தினத்தையொட்டி, பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்தியதற்காக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பெண்கள் தங்களுடைய வீடுகளில் ‘மகளிர் நலன் போற்றும் முதல்வருக்கு நன்றி’ என்ற வாசகத்துடன் கோலமிட்டிருந்தனர். தமிழ்நாட்டின் முதல்வராக கலைஞர் இருந்த காலத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கான கல்வி, வேலை வாய்ப்பு, சொத்துரிமை, உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு, மகளிர் திட்டம் – மகளிர் சுய உதவிக்குழுக்கள் முதலான பல திட்டங்களை நிறைவேற்றினார்.
இந்த திட்டங்களால் பெண்கள் வாழ்வில் உயர்ந்து பொருளாதார விடுதலை பெற்றுள்ளனர். அந்தவகையில், கலைஞரின் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பால் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதைக் கூறி, ஆண், பெண் என்ற வேறுபாட்டை நீக்கி 3 பெண்களை அர்ச்சகர்களாக நியமித்து, 5 பெண்களை ஓதுவார்களாக பணியில் அமர்த்தி அதிரடி சாதனை படைத்துள்ளார்.
இதுதவிர, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமை தொகை என முதல்வரின் சீர்மிகு சிறப்பு திட்டங்களால் மகளிர் சமுதாயம் அடைந்து வரும் முன்னேற்றம், தன்னம்பிக்கை உணர்வு, சமத்துவச் சிந்தனை இவையெல்லாம் பெண்களின் பெருமை பேசும் ஆவணங்களாக திகழ்கின்றன. இந்நிலையில் உலக மகளிர் தினமான நேற்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பெண்கள் தங்களுடைய இல்லத்தின் வாசலில் ‘மகளிர் நலன் போற்றும் முதல்வருக்கு நன்றி’ என்ற வாசகத்துடன் வண்ணக்கோலமிட்டு தங்களின் நன்றியை தெரிவித்தனர்.