கோத்தகிரி: கோத்தகிரி அருகே பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுமி இறந்த விவகாரத்தில் போலீசார் டிரைவரை கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரையை சேர்ந்தவர் பிரவி (48) விவசாயி. இவரது மனைவி ஷோபனா (34). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் லயா (4) கோத்தகிரி அருகே கேர்க்கம்பையில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் சிறுமி லயா வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். பஸ்சை டிரைவர் தியாகராஜன் (28) ஓட்டினார்.
கூக்கல்தொரை பகுதிக்கு வந்தவுடன் சிறுமி லயா, பஸ்சிலிருந்து இறங்கினார். அப்போது போனில் பேசிக்கொண்டு, முன்பு வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக பஸ்சை டிரைவர் கவனக்குறைவாக இயக்கினார். இதில் பஸ் சிறுமி லயா மீது பஸ் மோதியது. அப்போது தாய் கண்முன்னே லயா உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கோத்தகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் டிரைவர் சாதாரண நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் மட்டுமே வைத்திருந்ததும், பள்ளி பஸ்சில் கிளீனர் மற்றும் பாதுகாப்பு உதவியாளர் இல்லை என்பதும், கவனக்குறைவாக பஸ்சை இயக்கியதால் சிறுமி இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பஸ் டிரைவர் தியாகராஜனை போலீசார் கைது செய்தனர். மேலும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.