அம்பத்தூர்: அம்பத்தூர் மற்றும் விருகம்பாக்கம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.அம்பத்தூர் அடுத்த சோழபுரத்தில் வசிக்கும் 36 வயது பெண், அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் கடந்த 2ம் தேதி புகார் ஒன்றை கொடுத்தார். அதில், அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் ஒருவர், தனது மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாகவும், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியிருந்தார்.
விசாரணையில், அம்பத்தூர் அடுத்த பொத்தூர் பகுதியை சேர்ந்த பெயின்டர் முருகன் (26), சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. அதைத் தொடர்ந்து முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நேற்று முன்தினம் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். அண்ணாநகர்: விருகம்பாக்கம் இந்திரா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (30), பெயின்டர். இவர், நேற்று முன்தினம் நெற்குன்றம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்துள்ளார். அப்போது அங்கிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜெய்கணேஷை சரமாரியாக தாக்கி, கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இதில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ஜெய்கணேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.