செய்யாறு: செய்யாறு நகரில் குலுக்கல் சீட்டு நடத்தி ரூ25 கோடி மோசடி செய்ததாக, நிதி நிறுவனம் மீது நேற்று ஒரே நாளில் 20 முகவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு- புதிய காஞ்சிபுரம் சாலையில் செயல்பட்டு வந்த எஸ்.எஸ். நிதிநிறுவனத்தில் பல ஆயிரம் பேர் குலுக்கல் சீட்டில் பணம் கட்டியுள்ளனர். ஆனால், நிறுவன உரிமையாளர்களான செய்யாறு திருவத்தூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன்(38), ராஜ்குமார்(35) ஆகியோர் பணத்தை திருப்பி தராமல் தலைமறைவாகிவிட்டனர். இதற்கிடையில், கடந்த வாரம் அனக்காவூர் பகுதியை சேர்ந்த அருள்தேவன் கொடுத்த மோசடி புகாரின் பேரில் எஸ்.எஸ். நிதிநிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சீனிவாசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, தலைமறைவாக உள்ள மற்றொரு உரிமையாளரான ராஜ்குமாரை தேடி வருகின்றனர். இந்நிலையில், செய்யாறு மற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் முகவர்களாக செயல்பட்ட 20 பேர் செய்யாறு போலீசில் நேற்று புகார் செய்தனர். அதில், சுமார் 2 ஆயிரம் பேரிடம் வசூலித்த ரூ25 கோடியை எஸ்.எஸ். நிதிநிறுவனத்தினர் மோசடி செய்துள்ளதாக கூறியுள்ளனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.