Sunday, October 6, 2024
Home » ரூ.5 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் நியோமேக்ஸ் நிறுவன சொத்து மதிப்பு குறித்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

ரூ.5 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் நியோமேக்ஸ் நிறுவன சொத்து மதிப்பு குறித்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

by Mahaprabhu

மதுரை: ரூ.5 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் நியோமேக்ஸ் நிறுவன சொத்து மதிப்பு குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிக்கை அளிக்க, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் கீழ் ஏராளமான துணை நிறுவனங்கள் இயங்கின. இதன் இயக்குநர்களாக கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், பாஜ பிரமுகரான வீரசக்தி உள்ளிட்ட பலர் செயல்பட்டனர். தங்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம், அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை ஈர்த்தனர். இதை நம்பி ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடிக்கும் அதிகமாக ஏராளமானோர் முதலீடு செய்தனர். ஆனால், கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ரூ.5 ஆயிரம் கோடி வரை வசூலித்து ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பான புகார்களின் பேரில், மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார், நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்கள் கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ நிர்வாகி வீரசக்தி உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக பலரை கைது செய்தனர். கைதானவர்களில் நியோமேக்ஸ் இயக்குநர் கமலக்கண்ணன் உள்ளிட்ட சிலர், மதுரை பொருளாதார முதலீட்டு குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) ஜாமீன் பெற்றனர். இந்நிலையில், நியோமேக்ஸ் இயக்குநர்கள் கமலக்கண்ணன், கபில் ஆகியோருக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக்கோரி, விருதுநகர் மாவட்டம் இ.சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த ரவிசங்கர் மற்றும் கபில் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுச் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதி, ‘இந்த வழக்கில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என கேட்டார். இதற்கு அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பா.நம்பிசெல்வன் ஆஜராகி, ‘வழக்குப்பதிவு செய்து 6 மாதமாகிறது. இதுவரை 964 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களிடம் மட்டும் ரூ.194 கோடிக்கு மோசடி நடந்துள்ளது. நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் ெபயர்களில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் இருப்பதை கண்டறிந்துள்ளோம்.

அந்த சொத்துக்களின் மதிப்பீடு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களிடம் விபரம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் தரும் விளக்கத்தை பொறுத்து சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு என்பது தெரியவரும்’ என்றார். அப்போது இயக்குநர்கள் தரப்பில் வழக்கை சுமூகமாக முடிக்க தயாராக உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களின் விபரத்தை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜன.31ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

You may also like

Leave a Comment

seventeen − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi