சென்னை: சிலர் உணவருந்திவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுவிடுவார்கள் என அதிமுக மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைமுகமாக தாக்கியுள்ளார். பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது பேசிய அவர், ஜனநாயக கட்சியாக இருப்பது பாஜக மட்டும் தான். வீடு நாம் கட்டியுள்ளோம், என்.டி.ஏ கூட்டணி நமது வீடு போன்றது. சிலர் உணவருந்திவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுவிடுவார்கள். வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டு அந்த வீட்டில் நாங்கள் இல்லை என கூறுகின்றனர்.
எங்கள் வீட்டில் அவர்கள் இல்லை என நாம் ஏன் சொல்ல வேண்டும்? என்று குறிப்பிட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம். உணவருந்தியவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். 9 வருடமாக காரத்தை தாங்கியவர்கள் இப்போது வெளியே சென்றுள்ளனர். நம் வீட்டில் உணவருந்தியவர்களை நாம் தவறாக பேச மாட்டோம். அவர்கள் என்ன சொன்னாலும் பலம் நமது பக்கம் இருக்கிறது, மக்கள் நம் பக்கம் இருக்கின்றனர். இந்த வீட்டிற்கு விருந்தினர்கள் வரத்தான் செய்வார்கள். வீட்டின் கதவு திறந்துதான் உள்ளது, மோடி அனைவரையும் வரவேற்பார் என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.