மக்களின் உணவுப் பழக்கங்களை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டுமெனில் அவர்களின் அன்றாட உணவு முறையைத் தெரிந்திருக்க வேண்டும். அன்றாட உணவு இயல்பானதாகவும், பண்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. இதில் இன்றியமையாதது, மூலப்பொருள் சேகரிப்பு ஆகும்.ஆதி மனிதன் காடுகளிலும், மலைகளிலும் அலைந்து உணவுப் பொருட்களைச் சேகரித்து உண்டான் என்பதை வரலாறு நமக்குக் கூறுகிறது. இன்றும்கூட உணவுக்கான சில மூலப் பொருட்களைச் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழர்கள் தங்களின் அன்றாட உணவுக்கான மூலப்பொருள்களை எவ்வாறு சேகரிக்கின்றனர் என்பதை அறிந்துகொள்வது அவசியம். அதனைத் தொடர்ந்து, சமைக்கும் முறைகள், உண்ணும் முறைகள், சிறுவர் உணவு, கீரை வகைகள், மீன் வகைகள் ஆகியவை பற்றியும் அறிந்துகொள்ளலாம்.
மூலப்பொருள் சேகரிப்பு
மூலப் பொருட்களைச் சேகரிக்கும் முறை அனைத்து மக்களிடமும் ஒரே மாதிரியாகக் காணப்படவில்லை. மக்களின் பொருளாதார நிலைக்கேற்ப உணவுக்கான மூலப்பொருட்களைச் சேகரிக்கும் முறையும் மாறுபடுகிறது. கிராமப்பகுதி களில் வாழும் மக்கள் வேளாண் தொழிலைப் பெரும்பகுதியாகக் கொண்டுள்ளவர்கள் என்பதனால் இவர்களைப் பொருளாதார நிலையின் அடிப்படையில் ஏழ்மைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள், ஏழ்மைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் என இரண்டு விதமாக பிரித்துக்கொள்ளலாம். இந்த இரண்டு வகை மக்களை இவ்வாறு பிரிப்பதற்கு முன் `ஏழ்மைக்கோடு’ என்பதை நாம் வரையறை செய்துகொள்வது நல்லது. வேலை செய்வதற்குப் போதிய கலோரி சக்தியை அன்றாடம் உணவின் மூலம் அடைய முடியாதவர்கள் ஏழ்மைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.இந்த அடிப்படையில் மேற்கண்ட இரு பிரிவு மக்களிடையே உணவுக்கான மூலப்பொருட்களைச் சேகரிக்கும் முறைகள்:உணவுப்பொருட்களை ஓர் ஆண்டுக்குத் தேவையானவை, ஒரு மாதத்திற்குத் தேவையானவை, ஒரு நாளைக்கு தேவையானவை என 4 வகைகளில் சேகரிக்கின்றனர்.
ஓர் ஆண்டுக்குத் தேவையானவை
நெல், கரும்பு, கேழ்வரகு, வரகு, சோளம், உளுந்து, பயறு, துவரை மற்றும் புளி ஆகிய பொருள்களை ஓர் ஆண்டுக்குத் தேவையான அளவில் சேமித்து வைக்கின்றனர். நெல், கம்பு, கேழ்வரகு, வரகு ஆகிய தானிய வகைகளை மரத்தொம்பை, மண் தொம்பை, சேர், அடுக்குப்பானைகள் என தானியங்களின் அளவுகளுக்கேற்பவும், மக்களிடம் உள்ள பொருட்களுக்கு ஏற்பவும் சேமித்து வைக்கின்றனர். உளுந்து, பயறு, துவரை மற்றும் புளி ஆகியவற்றை அடுக்குப் பானைகளில் சேமித்து வைக்கின்றனர்.
ஒரு மாதத்துக்குத் தேவையானவை
கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், பூண்டு, உப்பு, கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, பெருங்காயம், எண்ணெய் போன்ற மளிகைப் பொருட்களை ஒரு மாதத்துக்குத் தேவையான அளவு கடைகளில் வாங்கிச் சேமிக்கின்றனர். எள், மணிலா போன்ற எண்ணெய் வித்துகளைச் சொந்த நிலங்களில் பயிரிடு வோர் செக்கில் எண்ணெய் பிழிந்து சேமித்து வைத்துக் கொள்வதும் உண்டு.
ஒரு வாரத்துக்குத் தேவையானவை
வெங்காயம், தக்காளி, இஞ்சி, கருவாடு மற்றும் காய்கறிகளை ஒரு வாரத்துக்குத் தேவையான அளவு வாரச் சந்தையில் வாங்கி வைத்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கிழமையில் சந்தைகள் கூடுகின்றன. அந்தச் சந்தைகளில் மேற்கண்ட பொருட்களை வாங்குகின்றனர்.மேலும் சமையலுக்குத் தேவையான மண்சட்டிகள், அடுப்பு, துடுப்பு, மோர்கடையும் மத்து, பருப்பு கடையும் மத்து, இருப்பு வாணலி, தாளிப்புக் கரண்டி (ஆலகரண்டி), வடவாரி, தோசைக்கல், முக்குழியான் சட்டி, அரிவாள்மணை போன்ற புழங்கு பொருட்களையும் இங்கு வாங்கிச் செல்கின்றனர்.தினசரி காய்கறிக்கடைகளை விட சந்தையில் விலை மலிவு என்பதாலும், கிராமங்களிலிருந்து தினமும் நகரத்துக்கு வர இயலாச் சூழல் காரணமாகவும் சந்தையில் வாங்கிச் செல்கின்றனர். சந்தைக்குச் சென்று வாங்க இயலாதவர்களின் வசதிக்காக சந்தையிலிருந்து காய்கறிகளை வாங்கி மிதிவண்டியில் கொண்டு வந்து கிராமங்களில் ஒரு சிலர் விற்பதுண்டு. இது இருபது ஆண்டுகளுக்கு முன்பு வழக்கிலிருந்தது. தற்போது அருகியே காணப்படுகிறது.
ஒரு நாளுக்குத் தேவையானவை
மேற்கண்ட வகைகளில் உணவுப் பொருட்களைச் சேகரித்து வைத்தாலும் சிலவகை உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்க இயலுவதில்லை. அன்றே வாங்கி அன்றே பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ள கீரை வகைகள், மீன் வகைகள், இறைச்சி வகைகள் ஆகியவற்றை ஒரு நாளுக்குத் தேவையான அளவு சேகரிக்கின்றனர்.ஏழ்மைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் அன்றாட உணவுக்கான மூலப்பொருள்களைச் சேகரிக்கும் முறைகள்:ஏழ்மைக் கோட்டிற்குக் கீழுள்ள மக்களால் உணவுக்கான எந்த மூலப் பொருட்களையும் ஓர் ஆண்டுக்குத் தேவையான அளவு சேகரிக்க இயலுவதில்லை. அறுவடைக் காலங்களில் கூலியாகப் பெறும் தானியங்கள் கூட, ஒருசில மாதங்களுக்கே போதுமான அளவாக உள்ளன. எனவே இவர்கள் பெரும்பாலும் உணவுக்கான மூலப்பொருட்களை அன்றாடம் சேகரிக்க வேண்டியுள்ளது. இதனாலேயே இவர்கள் அன்றாடங் காய்ச்சிகள் என அழைக்கப்படுகின்றனர். வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் கூலிக்கேற்ப அன்றாடம் உணவுக்கான மூலப்பொருள்களைக் கடையில் வாங்கிச் சமைத்து உண்ணுகின்றனர்.
கூலி வேலை செய்ய இயலாத வயது முதிர்ந்த பெண்கள் அறுவடை நாட்களில் நெல்லடித்த களங்களில் கிடக்கும் பதர்களைத் தூற்றி அதிலிருக்கும் நெல் மணிகளைச் சேகரிப்பது உண்டு. மேலும் அறுவடை முடிந்த நெல்வயலில் இருந்து `தப்புக்கதிர்’, மணிலா வயலில் இருந்து `தப்புக்கடலை’, கம்பு வயலில் இருந்து `சீட்டை’ ஆகியவற்றைச் சேகரிக்கும் வழக்கங்களும் காணப்படுகின்றன. வயல் வரப்புகளில் உள்ள எலிவளையை மண்வெட்டியால் வெட்டி அதில் எலிகள் சேமித்து வைத்திருக்கும் நெல்லைச் சேகரிப்பது ஒரு சிலரிடம் காணப்படும் வழக்கம். வயலில் களை வெட்டும்போது கிடைக்கும் பல்வேறு வகையான கீரைகளை மடியில் சேகரிக்கும் வழக்கம் பெண்களிடம் உண்டு. உணவு சமைப்பதற்குத் தேவையான விறகுகளையும் அன்றாடம் வேலை முடிந்து வரும்போது சேகரித்து வரவேண்டிய நிலையே இவர்களிடம் காணப்படுகிறது. இவ்வாறு உணவுக்கான மூலப் பொருட்களைச் சேகரிக்கும் முறைகள் மக்களின் பொருளாதார நிலைக்கேற்ப மேற்கண்ட முறைகளில் மாறுபடுகின்றன.
– இரத்தின புகழேந்தி.