ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜ கூட்டணி வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். நேற்று ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவ மக்களின் ஆதரவை திரட்ட வந்தார். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவ பிரதிநிதிகள் புனித சூசையப்பர் ஆலயத்தில் கூடியிருந்தனர். ஆதரவு திரட்ட வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சிடம் மீனவ மக்கள் சரமாரியாக தங்களின் பிரச்னைகளை கூறி கதறி அழுதனர். உடன் இருந்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அனைத்துக்கும் தலை ஆட்டிக்கொண்டே இருந்தார்.
கூட்டத்தில் என்ன செய்வது என இருந்த ஓபிஎஸ், இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானுக்கு போன் செய்து பேசி விட்டு மீனவர்களை விடுதலை செய்வதற்கு முயற்சி செய்வதாக கூறினார். ‘‘முதலில் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்க… உங்களுக்கு ஒட்டு போடுகிறோம்’’ என கூறினர்.
இறுதியாக உங்களின் ஒருவனாக இருந்து உங்களின் கோரிக்கைளை நிறைவேற்றுவேன் என கூறி கும்பிட்டபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதில் மாவட்ட உள்ளூர் பாஜவினர் ஒருவர் கூட கலந்து கொள்ளாததால் மீனவர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். மீனவர்கள் பிரச்னைகளை தீர்க்காத ஒன்றிய அரசு, தேர்தலுக்கு மீனவ மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க முடியாது என தெரிந்து ஓபிஎஸ்க்கு சீட்டு கொடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசிக்கொண்டனர்.