ஊட்டி : ஊட்டி – இத்தலார் சாலையில் முத்தோரை பாலாடா பகுதியில் சாலையோரங்களில் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள் காற்றில் சேதமடையாமல் இருக்க நெடுஞ்சாலைத்துறையினர் பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் முக்கிய சாலையோரங்களில் நிழல்தரும் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் சாலையோரங்களில் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இவை கால்நடைகள் கடித்து சேதமடைந்து விடாமல் இரும்பு கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில் மரக்கன்றுகள் கூண்டுகள் சில இடஙகளில் சாய்ந்துள்ளன. மேலும் மரக்கன்றுகள் முறிய கூடிய நிலை நிலவியது. குறிப்பாக, இத்தலார் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசி வரும் நிலையில், அப்பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் நெடுஞ்சாலைதுறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.