புழல்: சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சிக்னல் சோழவரம் செல்லும் திசையிலும், சோழவாரத்தில் இருந்து செங்குன்றம் செல்லும் திசையிலும் சிக்னல் விளக்குகள் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக எரியாமல் உள்ளது. இதன் காரணமாக 2 சாலை பக்கங்களிலும் செல்லும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. குறிப்பாக, இந்த சிக்னல் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது.
இதனால் சாலை கடக்கும்போது பள்ளிக்கு செல்லும் மாணவ – மாணவிகள், மருத்துவமனை மற்றும் கோயிலுக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு சாலையை கடக்கின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் சாலை கடக்கும் பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட செங்குன்றம் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து எரியாமல் உள்ள சிக்னல் விளக்குகளை எரிய வைக்கவும், சுழற்சி முறையில் போக்குவரத்து போலீசார் பணியில் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாடியநல்லூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.