திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன்(31). இவர் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் திருவள்ளூர் பத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த பாபு (22), பெரம்பூரை சேர்ந்த ஹரி (23) ஆகிய 2 பேர் உணவு சாப்பிட வந்துள்ளனர். அவர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது உணவு குறைவாக உள்ளதாக கூறி ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாஸ்ட் புட் கடை உரிமையாளர் ராஜன் வந்து தகராறு செய்த இளைஞர்களை அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தனது நண்பர்கள் 2 பேருடன் நேற்றிரவு வந்து கடையில் இருந்து வீட்டுக்கு கிளம்பும்போது ராஜனை கத்தியால் கை மற்றும் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளனர். கையில் வைத்திருந்த இரும்பு ராடால் பின்பக்க தலையில் சரமாரியாக அடித்ததில் ரத்த வெள்ளத்தில் ராஜன் விழுந்து மயக்கம் அடைந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் வந்து ராஜனை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குபதிவு செய்து விசாரித்து திருவள்ளூர் பத்தியால்பேட்டை பாபுவை கைது செய்தார். இதில் சம்பந்தப்பட்ட ஹரி உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.