பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே கூடுதல் விலைக்கு விற்க பதுக்கிய 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடியில் கடந்த சில மாதங்களாக கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை நடைபெற்று வருவதாக பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல்கள் வந்தது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, செல்வம்(55) என்பவர் கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை செய்வது தெரியவந்தது. இது தொடர்பாக அவரை போலீசார் பிடித்தனர். மேலும் அவர், காட்டுகொட்டகையில் பதுக்கி வைத்திருந்த 400 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களின் மொத்த மதிப்பு ₹75 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.