சென்னை: எந்தக் கட்சிக்குள் சாதிய அடக்குமுறை இருந்தாலும், அது ஒழிக்கப்பட வேண்டும் என பா.ரஞ்சித்துக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; `மாமன்னன்’ திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் – ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது திமுக.
ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் `சமூகநீதி’யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு. அண்ணா-கலைஞர் வழியில் எங்கள் திமுக தலைவர் அவர்களும் இப்பணியைத் தொடர்கிறார். `பராசக்தி’யில் தொடங்கி `மாமன்னன்’ வரை கலைவடிவங்களிலும் `சமூகநீதி’யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம். ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும்கூட.
ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். இப்பயணத்தில் திமுக மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் ரஞ்சித் அவர்களுக்கு நன்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.