திருவொற்றியூர்: எண்ணூரில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, சுடுநீர் கழிவுநீர் தொட்டியில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். தண்டையார்பேட்டை, விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் முனிவேல் மகன் கிரண்ராஜ் (19), வெல்டிங் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் எண்ணூரில் உள்ள சக நண்பர்களை பார்ப்பதற்காக கிரண்ராஜ் சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் 9 பேரும் ஏர்ணாவூர் குப்பம் கடற்கரை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இதனைக்கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள், ஏன் இங்கு விளையாடுகிறீர்கள், யார் நீங்கள் என்று விசாரித்தனர். இதில் பயந்துபோன அவர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடினர். அப்போது, எண்ணூர் அனல்மின் நிலையத்தின் அருகே பயன்படுத்தப்படாமல் இருந்த கழிவுநீர் தேங்கியுள்ள சுடுநீர் தொட்டியில் கிரண்ராஜ் தவறி விழுந்தார். சக நண்பர்கள் கிரண்ராஜை காணவில்லை என்று தேடிபார்த்தபோது தொட்டியில் கிரண்ராஜ் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் போலீசார், கிரண்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.