Wednesday, May 29, 2024
Home » மின்மாற்றி வெடித்ததில் ஊழியர் படுகாயம் லிப்ட்டில் சிக்கி தவித்த 8 அரசு ஊழியர்கள்

மின்மாற்றி வெடித்ததில் ஊழியர் படுகாயம் லிப்ட்டில் சிக்கி தவித்த 8 அரசு ஊழியர்கள்

by Lakshmipathi

*வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

வேலூர் : வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஏ மற்றும் பி பிளாக்கில் கலெக்டர், டிஆர்ஓ, ஆர்டிஓ, முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகங்கள், தனித்துணை ஆட்சியர் அலுவலகம் என 33 துறைகளின் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. நேற்று காலை வழக்கம்போல் அனைத்து அலுவலகங்களும் செயல்பட தொடங்கியது. அதேபோல் திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடக்கும் எனக்கருதி ஏராளமான பொதுமக்கள் மனுக்களுடன் வந்தனர். ஆனால் மக்களவை தேர்தல் விதிமுறை காரணமாக கூட்டம் நடைபெறவில்லை என்பதையறிந்து மனுக்களை பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர். 2வது மாடியில் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் பகல் 11.50 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் திடீரென மின் தடை ஏற்பட்டது. உடனே கலெக்டர் அலுவலக பின்புறத்தில் உள்ள மின்மாற்றி அறையில் பொதுப்பணித்துறை ஒப்பந்த ஊழியர் சந்தோஷ்குமார்(30) என்பவர் அங்குள்ள மின்மாற்றியை ‘ஆன்’ செய்துள்ளார். அப்போது, மின்மாற்றி திடீரென வெடித்து சிதறியது. அந்த மின்மாற்றி முழுவதும் எரிந்தது. இதில் ஊழியர் சந்தோஷ்குமார் படுகாயம் அடைந்தார். சத்தம் கேட்ட ஊழியர்கள் அவரை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் மின்மாற்றி வெடித்ததை தொடர்ந்து அனைத்து அலுவலகங்களிலும் லிப்ட் இயக்கம் திடீரென தடைபட்டது. அப்போது ‘ஏ’ பிளாக்கில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் செல்லும் லிப்ட் 2வது மாடியில் இருந்து 1வது மாடிக்கு சென்றது. ஆனால் மின் இணைப்பு கிடைக்காமல் திடீரென லிப்ட் நடுவழியில் நின்றது. லிப்ட்டும் ‘லாக்’ ஆகிவிட்டது. அந்த லிப்டில் 8 ஆண், பெண் அரசு ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சலிட்டனர். இதைக்கண்ட மற்ற ஊழியர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தகவலறிந்த பொதுப்பணித்துறை ஊழியர்களும் விரைந்து சென்று லிப்ட்டை இயக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து லிப்ட் சாவியை கொண்டு வர முற்பட்டனர். ஆனால் மின்மாற்றி எரிந்த அருகில் சாவி வைக்கப்பட்டு இருந்ததால் உடனடியாக சாவியை எடுக்க முடியவில்லை. இதையடுத்து சுமார் 20 நிமிடம் போராடி லிப்ட் கதவை திறந்து 8 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர். இதனை தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு பிறகு கலெக்டர் அலுவலகத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. லிப்டில் 8 ஊழியர்கள் சிக்கி தவித்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

19 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi