மூணாறு, நவ. 15: மூணாறு அருகே ஆனையிறங்கல் அணைக்கட்டில் படகு கவிழ்ந்து மூழ்கிய பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இருவரை தேடும் பணி 3வது நாளாக தொடர்கிறது.
கேரளா மாநிலம் மூணாறு அருகே சின்னக்கானல் 301 காலனியில் வசித்து வருபவர்கள் நிரப்பேல் கோபி (62), பரக்கல் சஜீவன் (38). இவர்கள் இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன் மதியம் 12 மணியளவில் பூப்பாறை நகருக்குச் சென்று பொருட்களை வாங்கி விட்டு சிறிய படகு மூலம் 301 காலனியை நோக்கி ஆனையிறங்கல் அணைக்கட்டு நீர்நிலையில் பயணம் செய்துள்ளனர். காலனியில் உள்ள சஜீவ் என்பவரது வீட்டின் கீழ்பகுதியில் வந்தபோது படகு திடீரென கவிழ்ந்தது. தண்ணீரில் தவறி விழுந்ததில் நிரப்பேல் கோபி, சஜீவனும் ஆகிய இருவரும் மூழ்கிவிட்டனர். இந்நிலையில் இவர்களை தேடும் பணி 3வது நாளாக தொடர்கிறது. மூணாறு தீயணைப்பு படை வீரர்கள், தொடுபுழா மற்றும் கொச்சியில் உள்ள ஸ்கூபா குழுவினர் இணைந்து தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அணைக்கட்டில் இருவரும் மூழ்கிய பகுதி ஆழமான பகுதி என்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.