பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். தமிழ்நாடு மின் வாரியத்தை தமிழ்நாடு அரசு துண்டு துண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே தமிழ்நாடு மின்சார வாரியம் என்பதை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் என பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை உற்பத்தி (அனல்), பசுமை மின்சாரம், மின் விநியோகம் என மேலும் 3 ஆக பிரிக்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
காலி பணியிடங்களை நிரப்புதல், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்திர செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் தற்போது, திடீரென பிரிப்பதற்கு எதிர்ப்புகளை பதிவு செய்தனர். மேலும் வருங்காலங்களில் தனியார் மையத்திற்கு வழி வகுக்கும். மின்சார வாரியத்தை மேலும் பிரிப்பதால் பொறியாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரின் சலுகைகளும், உரிமைகளும் பறிபோகும் அபாயம் இருப்பதாகவும், மின்வாரியத்தை பிரிக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும், இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என தொழிற்சங்கத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.