பெஷாவர்: தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாகிஸ்தான் காவல் நிலையம் ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 போலீசார் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் நாளை மறுநாள் (பிப். 8) பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கான் மாவட்டத்தில் உள்ள தேரா இஸ்மாயிலில், சோட்வா காவல் நிலையம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் 10 போலீசார் உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்தனர். கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, தீவிரவாத கும்பலை சேர்ந்தவர்கள் மின்னல் தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதல் நடத்திய கும்பல் போலீசாரின் பிடியில் சிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களிலும் கடந்த காலங்களில் தேர்தல்களின் போதும், இதேபோன்று தீவிரவாத தாக்குதல் இருந்தது. அதனால் நாளை மறுநாள் தேர்தல் நடப்பதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.