மும்பை: 127 ஆண்டுகள் பழமையான கோத்ரேஜ் குழுமம், கோத்ரெஜ் என்டர்பிரைசஸ் மற்றும் கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் என 2 குழுமமாக பிரிக்கப்பட்டுள்ளது. உரிய ஒப்புதலுக்கு பிறகு இந்த இரண்டு நிறுவனங்களும் தனித்தனியாக செயல்படும். எனினும், கோத்ரெஜ் பிராண்டை இரு நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய ஒப்பந்தப்படி, கோத்ரெஜ் என்டர்பிரைசஸ் குழுமம், தற்போதைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜாம்ஷித் கோத்ரெஜ் மற்றும் அவரது மருமகள், நிர்வாக இயக்குநர் நைரிகா ஹோல்கர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும்.
இந்த குழுமத்தில் கோத்ரேஜ் அண்ட் பாய்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் உள்ளன. அவை விண்வெளி, விமான மற்றும் ராக்கெட் இன்ஜின் பாகங்கள் தயாரிப்பு, பாதுகாப்பு, கட்டுமானப் பொருட்கள், கட்டுமானம், ஹெல்த்கேர் உபகரணங்கள், ஐடி, மென்பொருள் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுகின்றன. மற்றொரு குழுமமாக பிரியும் கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்துக்கு நாதிர் கோத்ரெஜ் தலைவராக இருப்பார். மேலும், இந்த நிறுவனத்தை அவரது மூத்த சகோதரர் ஆதி கோத்ரெஜ், நாதிர் கோத்ரெஜ் குடும்பத்தினர் நிர்வாகிப்பார்கள்.
ஆதி கோத்ரெஜின் மகன் பிரோஜ்ஷா கோத்ரெஜ் நிர்வாக துணைத் தலைவராக இருப்பார். மேலும் ஆகஸ்ட் 2026ல் நாதிர் கோத்ரெஜ்ஜூக்குப் பிறகு குழுமத்தின் தலைமைப் பொறுப்பை இவர் ஏற்பார்.