கட்சிரோலி: மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உடல்நலம் பாதித்திருப்பதால் விரைவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்றும் அவருக்கு பதிலாக புதிய முதல்வர் நியமிக்கப்படுவார் என்றும் காங்கிரசை சேர்ந்த சட்டபேரவையின் எதிர்க்கட்சி தலைவர் விஜய் வட்டேட்டிவர் தெரிவித்தார்.மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் விஜய் வட்டேட்டிவர் கூறியதாவது: ஏக்நாத் ஷிண்டே உடல்நலக் குறைவால் பாதித்திருப்பதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
அவர் இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார். முதல்வரை மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அஜித்பவார்தான் புதிய முதல்வர் என அவருடைய ஆதரவாளர்கள் பேசிக்கொள்கிறார்கள். இந்த பின்னணியில்தான் கடந்த சனிக்கிழமை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும் அஜித் பவாரும் புனேயில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் சந்தித்து பேசினர். இவ்வாறு விஜய் வட்டேட்டிவர் தெரிவித்தார்.