Sunday, October 6, 2024
Home » போலி பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளரானவர் தொண்டர்கள் தூக்கி எறிவதற்குள் எடப்பாடி ராஜினாமா செய்யணும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

போலி பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளரானவர் தொண்டர்கள் தூக்கி எறிவதற்குள் எடப்பாடி ராஜினாமா செய்யணும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

by Ranjith

தேனி: தொண்டர்கள் கூடி தூக்கி எறிவதற்கு முன்பாக, எடப்பாடி பழனிசாமி தானாக முன்வந்து அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார். தேனி அருகே மதுராபுரி கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தரப்பில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு பெயரில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

எடப்பாடி பழனிசாமி தலைமையில் 8 தேர்தல்களில் தோல்விதான் கிடைத்தது. 1989ல் ஜெயலலிதா தனியாக தேர்தலை சந்தித்தபோது கூட கொங்கு மண்டலத்தில் 5 சட்டமன்றத்தொகுதிகளில் வெற்றி பெற்றார். இன்றைக்கு எடப்பாடி போலி பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளரான பிறகு ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தலில் அதிமுக 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. நாம் இன்றைக்கு எம்.பி தேர்தலை எதிர்நோக்கி உள்ளோம். பல கட்சிகள் நம்மோடு கூட்டணி சேர தயாராக உள்ளது.

நாம் தனிக்கட்சி ஆரம்பிக்க மாட்டோம். தமிழ்நாடு முழுவதும் 88 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு, இவர்கள் மூலமாக கிளை, பேரூர், நகர, ஒன்றியம், மாநகராட்சி என அனைத்து மட்டங்களிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பிரிந்து கிடந்தால் வெற்றி கிடைக்காது என்பதால் அனைவரும் இணைய வேண்டும் என நான் சொல்கிறேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி முடியாது என்கிறார்.

என்னை 2001 மற்றும் 2011ம் ஆண்டுகளில் முதலமைச்சர் ஆக்கியது ஜெயலலிதா. அவர் இறந்தபோது மூன்றாம் முறையாக எனக்கு முதல்வர் பதவியை சின்னம்மாதான் தந்தார். அவர் கேட்டதும் பதவியை திருப்பித் தந்தேன். ஆனால், முதல்வர் பதவியை தந்ததும் தவழ்ந்து சென்று பதவியை பெற்ற எடப்பாடியிடம், சின்னம்மாவை கட்சியில் சேர்ப்பீர்களா என்றால், ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்கிறார்.

தவழ்ந்து, தவழ்ந்து முன்னேறியதாக கூறுகிறார். மக்களால் முதல்வரானவரில்லை எடப்பாடி பழனிசாமி. இவரை தொண்டர்கள் தூக்கி எறிவார்கள். நான் ஒன்றை எடப்பாடி பழனிசாமிக்கு சொல்லிக்கொள்கிறேன். தொண்டர்கள் உங்களை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தூக்கி எறிவதற்கு முன், நீங்களாகவே முன்வந்து பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.இவ்வாறு பேசினார்.

You may also like

Leave a Comment

thirteen + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi