சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை அதிரடியாக உயர்ந்தால், சில தினங்களுக்கு பிறகு குறைவது என்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 5ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ46,200 விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்சம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இந்த நிலையில் கடந்த 16ம் தேதி ஒரு சவரன் ரூ.45,720க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை குறைந்து வந்தது.
17ம் தேதி சவரனுக்கு ரூ360 குறைந்து ஒரு சவரன் ரூ45,360க்கும், 18ம் தேதி சவரனுக்கு ரூ160 குறைந்து ஒரு சவரன் ரூ45,200க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ25 குறைந்து ஒரு கிராம் ரூ5,625க்கும், சவரனுக்கு ரூ200 குறைந்து ஒரு சவரன் ரூ45,000க்கும் விற்பனையானது. நீண்ட மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை சவரன் ரூ45 ஆயிரத்துக்குள் வந்துள்ளது. அதே நேரத்தில் தொடர்ந்து 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ720 வரை குறைந்தது. இதனிடையே நேற்று தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அதிரடியாக உயர்ந்தது. அதாவது, நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ55 உயர்ந்து ஒரு கிராம் ரூ5,680க்கும், சவரனுக்கு ரூ440 உயர்ந்து ஒரு சவரன் ரூ45,440க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,675க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு குறைந்து ரூ.78.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்குவோர் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.