செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே கீரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (44). இவர் ஆட்டோ ஓட்டி வருகின்றார். திருக்கழுக்குன்றத்தில் இருந்து பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு நோக்கி சென்றார். அப்போது நெம்மேலி பகுதியில் வந்தபோது திடீரென சாலையில் நாய் ஓடியதால் அதன் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை திருப்பியபோது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் 4 மாணவர்கள், ஆட்டோ டிரைவர் ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு உடனே செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. இந்த விபத்து தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், சாலையில் ஓடிய நாய் மீது மோதி ஆட்டோ கவிழ்ந்த சிசிடிவி காட்சி சமூவலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.