திருச்செந்தூர்: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கோடிக்கணக்கான கோவில்களின் சொத்துக்கள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கனிமொழி எம்.பி. கூறினார். “கோவில்களின் நிர்வாகத்தை திராவிட இயக்கங்கள் கையகப்படுத்தி பெரும்பான்மை மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பெரும்பான்மை மக்கள் வழிபடும் கோவில் நிர்வாகத்தில் நடக்கும் தவறுகளை களைவதற்காகவே கோவில் நிர்வாகத்தை அரசு எடுத்து நடத்தி வருகிறது.
கோயில் சொத்துகள் உட்பட அனைத்தையும் தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் கோரிக்கையாக உள்ளது. கோவில் சொத்துக்களையும், நிர்வாகத்தையும் தனியார் கையில் கொடுப்பதன் மூலம், பாஜக தவறு இழைக்க நினைக்கிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கோடிக்கணக்கான கோவில்களின் சொத்துக்கள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கோவில்களை பாதுகாக்கக்கூடிய அரசாகவும் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து கடவுளை வைத்து, மதங்களை வைத்து, ஜாதி, இனங்களை வைத்து பொய் பிரசாரம் செய்துகொண்டு மக்களை பிரித்து அரசியில் செய்யக்கூடியவர்களிடம் இருந்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும். எல்லோரையும் சமமாக பார்க்கக்கூடிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.” இவ்வாறு அவர் கூறினார்.