திருப்பூர்: தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் இன்று காலை 7 முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், இன்று காலை தனது வாக்கை பதிவு செய்துவிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்ய தொடங்கினார். இதில் கோவை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்றபோது, அங்கு துணை ராணுவ படையினர் வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகவும், வயதானவர்கள் வாகனங்களில் வந்தால் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததாகவும் தெரிகிறது.
இதையறிந்த செல்வராஜ் எம்எல்ஏ வாக்காளர்களுக்கு இடையூறு செய்யும் துணை ராணுவ படையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்ணாவில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அங்கு இருந்த வாக்குச்சாவடி அதிகாரிகள் செல்வராஜ் எம்எல்ஏவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.