கோவை: தமிழ்நாட்டில் திமுக கூட்டணி முழுமையான வெற்றியை பெரும் என்று பாஜக ஆதரவு கூட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்து மக்கள் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டம் கோவை சித்தாம்புதூர் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் கஸ்தூரி வருவார் என கூறி அமரவைக்கப்பட்ட கூட்டத்தினர். அடிக்கடி அவர் வருவாரா என சாலையை நோக்கியபடியே காத்திருக்க இறுதிவரை அவர் வரவில்லை.
கூட்டத்தில் இருந்தவர்களை கவர்வதற்காக மோடியை போன்று வேடமணிந்து வந்த நபரை உண்மையான மோடி என நினைத்து பலர் கட்டி தழுவினர். நிகழ்ச்சியின் இறுதியில் அர்ஜுன் சம்பத் பேச வந்த போது கஸ்தூரிக்காக காத்திருந்தவர்கள் கலைந்து சென்றனர். கூட்டம் முடிந்த பிறகு இரவு 10 மணியளவில் அங்கு வந்த கஸ்தூரி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் திமுக கூட்டணி முழுமையான வெற்றியை பெறும் என கஸ்தூரி பேசியதால் அவர் அருகே நின்றிருந்த அர்ஜுன் சம்பத் அதிர்ச்சி அடைந்து வெளியேறினார்.